தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது ரீ-20 போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ரீ-20 தொடர் நடைபெற்று வருகிறது.
முதலாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் தொடரை தக்கவைப்பதற்காக 2வது போட்டியில் வென்றாகவேண்டிய நிலையில் இலங்கை அணி நேற்றைய தினம் களமிறங்கியது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டை இழந்து 111 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 39 ஓட்டங்களையும், குசல் பெரேரா 21 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் மார்க் வூட் மற்றும் ரஷீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.
112 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி டக் வேத் லூவிஸ் முறையில் வெற்றி பெற்றது.
போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் வெற்றி இலக்கு 18 ஓவர்களில் 103 என மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக லிவிங்ஸ்ரன்-29, பில்லிங்ஸ்-24 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
ஹசரங்க 2 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலிரு போட்டிகளையும் இங்கிலாந்து வென்றுள்ளதை அடுத்து 2:0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
தொடரின் இறுதி ரீ-20 போட்டி நாளை 26ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment